சென்னை, பிப்.1- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிமுகம் செய்துள்ள திட்டம் ”நான் முதல்வன் திட்டம்”. இது TNSDC எனப்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதன்மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருதல், உயர்கல்விக்கான வழிகாட்டுதல் வழங்குதல், போட்டி தேர்வுகளுக்கு தயாராக உதவி செய்தல், தொழில் முனைவோராக மாறுவோருக்கு பயிற்சி அளித்தல் ஆகிய நான்கு விஷயங்களுக்கு முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது.
மண்டல வாரியாக நேர்காணல்
இதுவரை 2,200க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் பயின்ற 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். 250க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு ஜனவரி மாதத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங் களில் TNSDC மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் வேலைக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் பொறியியல் படித்து முடித்த மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொறியியல் மாணவிகள் பங்கேற்பு
மேற்சொன்ன மூன்று மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் மொத்தம் 6,617 பேர் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் போதிய அளவில் திறன்களை வளர்த்து கொண்டு வேலைக்கான நேர் காணலில் பங்கேற்கும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது ‘நான் முதல்வன்’ திட்டம் என்பதை கவனிக்க வேண் டியுள்ளது.
சென்னை மண்டலம் – செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் – 1,444 மாணவிகள் பங்கேற்பு
கோவை மண்டலம் – தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர் – 2,537 மாணவிகள்
பங்கேற்பு
மதுரை மண்டலம் – கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, பெரம்பலூர், கரூர், மயிலாடுதுறை, புதுக் கோட்டை, சிவகங்கை, திருவாரூர் – 2,636 மாணவிகள் பங்கேற்பு
148 பேருக்கு வேலைவாய்ப்பு
இவர்களில் இருந்து 148 மாணவிகளுக்கு இன்போசிஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
இதில் 27 பேருக்கு சென்னையிலும், 62 பேருக்கு கோவையிலும், 59 பேருக்கு மதுரை யிலும் வேலை வழங்கப் பட்டுள்ளது.
இந்த மாணவிகள் அனைவருக்கும் Systems Engineer பதவி அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.