செங்கோட்டை, ஜன. 30- தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த புளியரை பகுதியை சேர்ந்தவர் குமார் (50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். பாஜ பட்டியல் அணி மேனாள் மாவட்ட தலைவரான இவர், தற்போது பாஜ செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
28.1.2025 அன்று இவர் புளியரையைச் சேர்ந்த ஒரு பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது அதனை அலைபேசியில் காட்சிப் பதிவாக எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து குமார் தப்பியோடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகாரின்படி புளியரை காவல் துறையினர் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர். அவரது அலைபேசியைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரை
கருநாடகம் திறந்து விட வேண்டும்
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
சென்னை, ஜன. 30- காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 111ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று (29.1.2025) காலை 11:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கேரள உறுப்பினர் மட்டும் நேரிடையாக கலந்து கொண்டார். மற்ற உறுப்பினர்கள் அவர்களது தலைமையிடத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் உறுப்பினர் தயாளகுமார், தலைமைப் பொறியாளர், திருச்சி மண்டலம், திருச்சியிலிருந்தும் மற்றும் தலைவர், காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு சென்னையில் இருந்தும் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு வலியுறத்தல்
தமிழ்நாடு அரசின் உறுப்பினர், 2024 ஜூன் 1ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27 வரை உள்ள காலகட்டத்தில் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளின் தற்போதைய நீர்வரத்து, நீர் இருப்பு ஆகிய விவரங்களை தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழலுக்கான நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கருநாடகம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இக்குழுவின் அடுத்த கூட்டம், 2025, பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.