குவஹாத்தி, செப்.13- அசாமின் நகாவ்ன் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அண்மையில் பா.ஜ.,வில் சேர்ந்த முன்னாள் அய்.ஏ.எஸ்., அதிகாரி தேபாஷிஷ் சர்மாவை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில், நகாவ்ன் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட பிரத்யுத் போர்டோலோய் வெற்றி பெற்றார்.
இவர், பா.ஜ.,வில் சேர்ந்ததை அடுத்து, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். காலியாக உள்ள நகாவ்ன் லோக்சபா தொகுதிக்கு அக்., 6ல், இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், நகாவ்ன் மக்களவைத் தொகுதி பா.ஜ., வேட்பாளராக முன்னாள் அய்.ஏ.எஸ்., அதிகாரி தேபாஷிஷ் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
நகாவ்ன் மாவட்ட ஆட்சியராக இருந்த அவர், கடந்த 3இல் விருப்ப ஓய்வு பெற்றார். கடந்த 8இல், பா.ஜ.,வில் அவர் இணைந்த நிலையில், சில நாட்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டமும் பெற்ற சர்மா, 1992 அசாம் கேடரைச் சேர்ந்த அய்.ஏ.எஸ்., அதிகாரி ஆவார்.
அசாமின் ஆளுநராக இருந்த எஸ்.கே.சின்ஹாவின் சிறப்பு அதிகாரியாகவும், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள அசாம் பவனின் குடியிருப்பு ஆணையராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
