சென்னை, செப்.1- சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் மீண்டும் சட்டப் பேரவையில் நடந்துகொள்ளும் முறை பற்றி அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவையில் தெரிவிக்கப் படும் கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படாத அளவுக்கு இருக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது:
“சட்டப்பேரவையின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்து களெல்லாம் சமூக ஊடகங்களில் பரவுவதாக கடந்த வாரம் சட்டப் பேரவையில் கூறினர். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நேரத்தில், எந்தவொரு அரசியல் கட்சிகளைச் சாராத இளைஞர்கள் குழு என்னைச் சந்தித்தனர்.
அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும், அரசியல் என்றால் என்ன என்பவற்றைப் படிப் படியாகத் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்திருப்பதாகக் கூறினர்.
அவர்களின் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை, அவர்கள் குடும்பத்தில் யாரும் அமைச்சராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லை. இருப்பினும், அவர்கள் அரசியலில் ஈடுபடும் எண்ணம் வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
அதேசமயம், அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் யோசிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினர். பேசுகிற போதே அவைக் குறிப்பில் இருந்து நீக்காத அளவுக்கு பேச வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தக் கூடாதா என்றும் கேட்டனர்.
ஆகையால், சட்டப்பேரவையில் பேசுகிற உறுப்பினர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, முறைப் படுத்திக் கொண்டு, நெறிப்படுத்திக் கொண்டு, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் விஷயங்களை ஏன் பேச வேண்டும் என சொல்லித் தரக் கூடாதா என்றும் கேட்கின்றனர். இதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவையில் பேசுகிற உறுப் பினர்கள், அவையின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் உங்களின் கண்ணி யத்தையும் கவுரவத்தையும் வாக்காளர் களின் கண்ணியத்தையும் காப்பாற்றுகிற விதத்தில் பேசினால், இவ்வாறான பிரச்சினை வராது.
அதையும் மீறி, அவையின் மாண்பைக் குறைக்கிற வகையில் பணிகள் நடைபெறும்போது, அவ்வாறு செய்கிறவர்களை வெளிக் கொணர்வதில் என்ன தவறு என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆகையால், இந்தப் பிரச்சினை குறித்து உங்கள் அனைவரிடமும் கலந்தாலோசித்து விரிவான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
