புகழ்பெற்ற பகுத்தறிவு ஆங்கில மாத இதழ் “தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்” (The modern Rationalist). தந்தை பெரியாரால் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் முதல் இதழின் முகப்புப் அட்டைப் பக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் படம் இடம் பெற்றிருந்தது. மக்களிடையே பகுத்தறிவு சிந்தனை, அறிவியல் பார்வை, சுயமரியாதை மற்றும் சமூக நீதி, மனிதநேயக் கருத்துகளை ஆங்கிலம் வழியாக கொண்டு சேர்ப்பதே இதன் முதன்மையான பணியாகும்.
“தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்” (The Modern Rationalist) இதழில் சமகாலச் சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், பகுத்தறிவு மற்றும் ஜாதி ஒழிப்பு குறித்த ஆழமான கட்டுரைகள் வெளியாகின்றன.
“பெரியார் பேசுகிறார்” (Periyar Speaks) என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் சிந்தனைகளும் உரைகளும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள் உள்ளிட்ட கட்டுரைகள் தொடர்ந்து ஆங்கிலத்தில் வெளியிடப் படுகின்றன. ஆண்டு தோறும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளையொட்டி (டிசம்பர் 2) ‘The Modern Rationalist’ பிறந்தநாள் மலர் (Annual number) ஆங்கிலத்தில் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
இவ்விதழ் தொடங்கப்பட்ட காலத்தி லிருந்தே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் திறம்பட நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (PSRPI) சார்பில் இதனை வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த இதழை இணைய வழியில் Magzter போன்ற வலைதளங்கள் மூலமாக மின்-இதழாகவும் (E-Magazine) வாசிக்க முடியும்.
‘சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்?’ என்பதற்கு தந்தை பெரியார் விளக்கம் கூறுகிறார்:
இன்றைக்கு சுயமரியாதை இயக்கக் கருத்துப் பரவல் அதன் பிரச்சாரம் சிறிய நிலப்பரப்பிற்குள் இருக்கலாம். ஆனால் இந்த கருத்துகள், உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. அந்த அளவில் சுயமரியாதை இயக்கக் கருத்துகள் உலகலாவியவை. உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரப்புரை செய்திட வேண்டும் என்ற பொருளில் விளக்கமளித்தார். நூற்றாண்டையும் கடந்து வெற்றி நடைபோடும் பெரியாரது கொள்கைகள் இன்றைக்கு ‘பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்’ என்பதாக பரவிக் கொண்டு இருக்கிறது. “தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்” இதழும் பெரியார் உலக மயப் பணிக்கு ஆக்கம் கூட்டி வருகிறது.
