லக்னோ, ஆக 27- உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்தியம் செய்து, உறுதி மொழி எடுத்த ஒரு காணொலி காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. லஞ்சமாக கிடைக்கும் பணத்தை தங்களுக்குள் நேர்மையாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த காட்சிப் பதிவில் ஒருவர் வாட்டர் பாட்டிலில் உள்ள கங்கை நீரை அங்குள்ள மற்ற நபர்களின் கைகளில் ஊற்றுகிறார். அதன் பிறகு அவர் “மாநகராட்சிக்கு கிடைக்கும் பணம் 60 கவுன்சிலர்களுக்கும் சமமாகப் பகிரப்படும். குழுவில் உள்ள யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், அனைவரும் ஒற்றுமை யாக அவருக்கு ஆதரவாக நிற்போம்” என சத்தியம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மற்ற அனைவரும் அதே வாக்கியங்களை மீண்டும் கூறி சத்தியம் செய்கின்றனர். மேலும், அந்த காட்சிப் பதிவில் சத்தியத்தை மீறிய ஒருவரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிப் பதிவு கவுன்சிலர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சவும்யா குருராணி அளித்த பேட்டியில், “இந்த காட்சிப்பதிவு 2025 நவம்பரில், முந்தைய மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. அப்படியிருந்தாலும், விசா ரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
வினாத்தாள் கசிவால் :
மராட்டியத்தில் மருந்து ஆய்வாளர் தேர்வு ரத்து
மும்பை, ஆக.27– மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் ‘குரூப் பி’ மருந்து ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மார்ச் 22-ஆம் தேதி நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 488 பேருக்கு ஜூலை 1 முதல் 22-ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது. இதற்கிடையே, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஜூலை 27-ஆம் தேதி மராட்டிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் காவல்துறை புகார் அளித்தது. குற்றப்பிரிவு விசாரணையில், தேர்வுக்கு முன்பே ஒரு விண்ணப்பதாரருக்கு வினாத்தாள் கிடைத்தது தெரியவந்தது. இதையடுத்து தேர்வை ரத்து செய்வதாக தேர்வாணையம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேர்காணல் வரை சென்ற 488 பேரும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு, ஜார்க்கண்ட் அரசுத் தேர்வுகளைத் தொடர்ந்து மராட்டியத்திலும் வினாத்தாள் கசிவால் ஒரு தேர்வு ரத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
