புதுடில்லி, ஆக. 27– ‘ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டத்தை இஸ்ரோ கைவிடுகிறது’ என்று இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா கூறினார்.
ராக்கெட் தயாரிப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டத்தை இஸ்ரோ கைவிடுவதாக செய்தி பரவியது. இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும் இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா டில்லியில் கூறியதாவது:-
இந்தியாவின் விண்வெளித் திட்டம் அதன் மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றங்களில் ஒன்றிற்குத் தயாராகி வருகிறது. இதற்காக இஸ்ரோ படிப்படியாக ராக்கெட்டுகள் மற்றும் வழக்கமான செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதிலிருந்து விலகி, இந்த நடவடிக்கைகளை தனியார் துறையிடம் ஒப்படைக்க உள்ளது.
இஸ்ரோ இனி எந்த ராக்கெட்டுகளையும் தயாரிக்காது. அவை அனைத்தும் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் செய்யப்படும். இந்த மாற்றம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இந்த மாற்றம் சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனமான எஸ்.எஸ்.எல்.வி. மூலம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அடுத்த கட்டம் இன்னும் முக்கியமானதாக இருக்கலாம். பி.எஸ்.எல்.வி. மற்றும் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மார்க்-3 (எல்.வி.எம்.3) ராக்கெட்டுகளும் தனியார் மயமாக்கலை நோக்கிச் செல்கின்றன.
இஸ்ரோவின் பங்கு, ராக்கெட்டுகள் முதல் செயற்கைக்கோள்கள் வரை அனைத்திற்கும் பொறுப்பான உற்பத்தியாளராக இருப்பதை விட, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாக அதிகளவில் இருக்கும். இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை வணிக ரீதியாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
