பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

இசுலாமாபாத், ஆக. 19- நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஅய்) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நேற்று அந்நாட்டு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இம்ரான் கானின் வழக்குரைஞர் நயீம் ஹைதர் பஞ்சுதா கூறுகையில், “நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஷிஃபா பன்னாட்டு மருத்துவமனைக்கு மாற்றி, வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை அங்கு அவருக்கு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது” என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பி.டி.அய். கட்சி வரவேற்றுள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுல்ஃபிகார் புஹாரி கூறுகையில், “நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் வரவேற்புக்குரியது. அவரது கண் பார்வையும் ஒட்டுமொத்த உடல்நலனும் மேலும் மோசமடைவதற்கு முன்பாகவே இந்த உத்தரவு வந்திருக்க வேண்டும். மருத்துவர்கள் முழு திருப்தி அடையும் வரை அவர் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆரிஃப் ஆல்வி தனது எக்ஸ் தள பதிவில், “இம்ரான் கானுக்கு மன அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. தனிமைச் சிறை அவரது உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாகச் சுதந்திரமான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜாம்பியா அதிபராக
ஹிச்சிலேமா மீண்டும் தேர்வு

லுசாகா, ஆக. 19- ஜாம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் ஹகைண்டே ஹிச்சிலேமா மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். னெ் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கடந்த 13ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.

தேர்தலின் போது நடந்த வன்முறை, வாக்குச் சீட்டுகள் திருடப்பட்ட சம்பவம் காரணமாக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தற்போதைய அதிபர் ஹகைண்டே ஹிச்சிலேமா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தம் உள்ள 50 லட்சம் பேர் வாக்காளர்களில் 29 லட்சத்து 65 ஆயிரம் பேர் (61.4 %) அவருக்கு வாக்களித்துள்ளனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி தலைவர் பிரையன் முண்டுபிலேவுக்கு 18 லட்சத்து 56 ஆயிரம் வாக்குகள்(38 %) கிடைத்துள்ளது. ஹிச்சிலேமாவின் வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்கள் தலைநகர் லுசாக்காவில் உள்ள தெருக்களில், ஆடியும், பாடியும்,பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *