அறிவியலின் விசித்திரங்களில் ஒன்றான முழு சூரிய மறைப்பு (சூரியகிரகணம்) சமீபத்தில் அய்ரோப்பிய நாடுகளில் மிகத் தெளிவாகத் தென்பட்டது. சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அய்ரோப்பிய நாடுகளான பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் இந்நிகழ்வு மிக அழகாகக் காட்சியளித்தது.
இந்த அரிய இயற்கை நிகழ்வைக் மக்கள் அனைவரும் இணைந்து கண்டு ரசிக்க மொனாக்கோ (பிரான்சு நிர்வாகத்தில் கீழ் உள்ள சுதந்திர நாடு) நாட்டு நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
சூரிய மறைப்பைக் காண வந்த மக்கள் அனைவருக்கும் கடற்கரையில் குறைந்த விலையில் விதவிதமான கடல் உணவுகளும், இதர வகை உணவுகளும் வழங்கப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மொனாக்கோ கடற்கரையில் குவிந்து, உணவுகளைச் சுவைத்த படியே அந்த அருமையான அறிவியல் நிகழ்வைக் கண்டு களித்தனர்.
இயற்கையின் மாற்றத்தை ஓர் அறிவியல் திருவிழாவாக அய்ரோப்பிய மக்கள் எதிர்கொண்ட விதம் உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அய்ரோப்பிய மக்கள் சூரிய மறைப்பை உணவோடு கொண்டாடிய அதே வேளையில், இந்தியாவில் இதைச் சுற்றி நிலவும் மூடநம்பிக்கைகள் இன்னும் தொடர்வது வேதனைக்குரிய விஷயமாக உள்ளன.
சூரியமறைப்பின்போது சாப்பிடக்கூடாது, சமைத்த உணவுகளைக் கொட்டிவிட வேண்டும், சூரிய மறைப்பு முடிந்த பிறகே உணவு உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாடு இங்குத் திணிக்கப்படுகிறது.
சூரிய மறைப்பு முடிந்தவுடன் பார்ப்பனர்களை அழைத்து பூஜை செய்து “தீட்டு” கழித்த பிறகே சாப்பிட வேண்டும் என்ற பிற்போக்குத்தனமான வழக்கங்கள் இன்றும் பின்பற்றப்படுகின்றன.
இந்த மூடநம்பிக்கைகளுக்குச் சிலர் போலி அறிவியலைச் சான்றாகக் காட்டுவதுதான் வேடிக்கையின் உச்சம்.
“சூரிய மறைப்பின்போது சூரியனிடமிருந்து ஆபத்தான கதிர்கள் வெளிப்பட்டு உணவை நச்சாக மாற்றிவிடும்; பூஜை செய்வதன் மூலம் அந்த அபாயகரமான கதிர்களை நீக்கிவிடலாம்… இதை நாசா (NASA) கூட ஒப்புக்கொண்டிருக்கிறது!” என்று அப்பட்டமான பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் நாசா அமைப்பின் பெயரையே இதற்காகப் பயன்படுத்தி கதை விடுவதும், அதை அணுவளவும் சிந்திக்காமல் படித்த பெருங்கூட்டம் இன்றும் நம்பி ஏற்றுக்கொள்வதும் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாகும்.
இந்த மூடநம்பிக்கையை எதிர்த்தும், மக்களிடத்தில் அறிவியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் திராவிடர் கழகம் தனக்கே உரித்தான செயல்பாட்டில் இறங்கியதுண்டு.
எடுத்துக்காட்டாக, சென்னை பெரியார் திடலில் 22.7.2009 அன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்ற சூரிய மறைப்பு தொடர்பான மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்தில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது
சூரிய மறைப்பின்பொழுது சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை செயல்முறை விளக்கம் மூலம் உலகத்திற்கு இரண்டாவது முறையாக அறிவியல் மனப்பான்மையோடு விளக்கியிருக்கின்றோம் என்று திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணி அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
சூரிய மறைப்பின் (கிரகணத்தின்)பொழுது உணவு உண்டால் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து என்று ஜோதிடர்கள், கடவுள் நம்பிக்கையாளர்கள் மக்களிடத்திலே மிகப்பெரிய அளவுக்கு மூட நம்பிக்கை கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
அதை முறியடிக்க திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டு திராவிடர் கழகமும், பெரியார் கல்வி நிறுவனங்களும் அந்த மூட நம்பிக்கைகளை செயல்முறை விளக்கம் மூலம் முறியடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
பெரியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த, மேடையின் பின்புறம் சூரிய கிரகண மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து என்ற தலைப்பில் வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது.
சூரிய மறைப்பு (கிரகணம்) ஆரம்பித்த வேளையில் நமது தோழர்கள் உண்ணும் விரதத்தை மேற்கொள்ளும்படி அனைவருக்கும் கழகத் தலைவர் கூறினார்.
அனைவருக்கும் இட்லி, வடை, பொங்கல், பூரி, கேசரி, தேநீர் என வழங்கப்பட்டது.
ஊடகத் துறையினர் ஏராளமானோர் காட்சிப் பதிவு செய்தனர். ஒளிப்படம் எடுத்தனர்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான பதிலை வழங்கினார் தமிழர் தலைவர் என்ற தகவலை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.
இதே போல் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமும் (25.10.2022) சூரிய மறைப்பு (கிரகணம்) அன்று விருந்து உண்ணும் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மேலும் புதுமை சேர்க்கும் விதமாக இரண்டு நிறைமாத கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சூரிய மறைப்பு உச்சத்தில் தெரியும் நேரமான மாலை 5:30 மணிக்கு உணவருந்தினர். அவர்கள் இருவருக்கும் சுகப்பிரசவம் ஆகி தற்போது, இரண்டு பிள்ளைகளும் நல்ல உடல் நிலையுடன் மழலையர் பள்ளிக்குச் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம்நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்சே தவிர அறிவு வளர்ச்சிக்கு துணை போவதில்லை என்பது மிகவும் வெட்கக் கேடானதே!
