ராஞ்சி, ஆக.16- ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து, கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களும், மாணவர்களும், நாட்டின் 80ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு ராஞ்சியில் தேசியக் கொடியை ஏந்தியவாறு ‘திரங்கா பயணம்’ பேரணியை நடத்தினர்.
ஜார்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) மற்றும் ஜார்கண்ட் மக்கள் சேவை ஆணையம் (JPSC) நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, தேர்வர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர நாளான (ஆகஸ்ட் 15இல்), ராஞ்சியிலுள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி கச்சரி சவுக், லால்பூர் சவுக் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மைதானத்தையே சென்றடைந்தது. ஒற்றுமை மற்றும் தேசப்பற்றின் செய்தியைப் பரப்பும் நோக்கில் மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் குறித்து சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 10 அன்று சட்டமன்றத்தை நோக்கி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததாகக் கூறி, 500-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில மாணவர் தலைவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
