புதுடில்லி, ஆக. 11- மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இரண்டு தனி நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.்அய். (CBI) மற்றும் என்.அய்.ஏ. (NIA) ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
மணிப்பூர் கலவரம் தொடர்பான சி.பி.அய். வழக்குகளை கையாள ஒரு தனி நீதிமன்றமும், என்.அய்.ஏ. வழக்குகளை கையாள மற்றொரு தனி நீதிமன்றமும் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை முறையாகத் தொகுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் களும், வழக்குரைஞர்களும் உரிய ஆவணங்களைப் பார்வையிட எளிதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்
கார்கே விமர்சனம்
புதுடில்லி, ஆக.11 நாடாளுமன்றத்தில் பேசாமல் ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (10.8.2026) விமர்சித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர்,
ராமன் கோயில் விவகாரத்தில், மோடிஜியின் நம்பிக்கைக்குரிய அறங்காவலர்களே திருட்டில் ஈடுபட்டனர். இது குறித்த விவரங்களை பிரதமர் தாமே வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. கடந்த 15 நாள்களில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசவில்லை. இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்காகவும் நாங்கள் போராடி வருகிறோம்.
நாங்கள் விவாதத்தை விரும்புகிறோம். அவர்கள் (அரசு) ஏன் விவாதிக்க விரும்பவில்லை? மற்ற விவகாரங்கள் குறித்து அவர்கள் அறிக்கை அளிக்கிறார்கள்; ஆனால் இந்த விவகாரம் குறித்து ஏன் அறிக்கை அளிக்கவில்லை? நாங்கள் ஒரு அறிக்கையை மட்டுமே கேட்கிறோம்.
இதற்கு அவர்களிடம் பதில் இல்லை. அவர்களால் அவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு; பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுமே பொறுப்பு.
மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் கொடுமைகள் குறித்து, அமித்ஷா அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கடந்த 17 நாட்களாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர் வருவதே இல்லை. பிரதமர் மோடியோ ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார் என கார்கே குறிப்பிட்டார்.
