வாசிங்டன், ஆக. 11– அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாக்களில் பெரும் கெடுபிடிகளை காட்டி வருகிறது. இதில் அடுத்த அதிரடியாக எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களை நீட்டிப்பதற்கு அதிகக் கட்டணம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி 50 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் எச்-1பி அல்லது எல்-1 விசாக்களை கொண்டவர்களாக இருந்தால் அவர்களின் விசா நீட்டிப்புக்கு கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எச்-1பி விசாவுக்கு 4,000 டாலராகவும் (சுமார் ரூ.3.80 லட்சம்), எல்-1 விசாவுக்கு 4,500 டாலராகவும் (சுமார் ரூ.4.28 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது அடுத்த மாதம் (செப்டம்பர்) 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
முன்பெல்லாம் இந்த கட்டணம் எச்-1பி மற்றும் எல்-1 விசாவுக்காக தொடக்கத்தில் மனு செய்யும்போதோ அல்லது விண்ணப்பதாரர் புதிய பணிக்கு மாறும்போதோ செலுத்த வேண்டும். ஆனால் தற்போது விசா காலத்தை நீட்டிப்பதற்கே இந்த கட்டணம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
ஒரே ஊழியருக்காக வழக்கமான நீட்டிப்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிறுவனங்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை செலுத்தி வெளிநாட்டினரை தக்க வைக்க அமெரிக்க நிறுவனங்கள் முன்வருமா? என்பது சந்தேகம் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பல்கலை.யில் தமிழ்நாடு மாணவருக்கு ரூ.3.55 கோடி கல்வி நிதி
நியூயார்க், ஆக. 11– தமிழ்நாடு மாணவர் பிரணவ் இளங்கோ அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ரூ. 3.55 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த பிரணவ் இளங்கோ, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ‘அய்வி லீக்’ கல்வி நிறுவனமான பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தேர்வாகியுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 3.55 கோடி மதிப்பிலான முழு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது.
இந்த உதவித்தொகை அவரது நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்புக்கான கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவுகள் அனைத்திற்கும் தேவையான கட்டணம் ஆகும். பொது சுகாதாரம் பயில பிரவுன் பல்கலைக்கழகத்தின் முழு கல்வி உதவித்தொகையையும் இதன் மூலம் அவர் பெற்றுள்ளார். 17 வயதான பிரணவ் இளங்கோ, தமிழ்நாட்டின் ஈரோட்டில் தொடங்கிய தனது கனவை, அமெரிக்காவின் ரோட் தீவில் அமைந்துள்ள உலகின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஹாங்காங் பல்கலைக்கழகத்திலிருந்தும் அவருக்கு 100% கல்வி உதவித்தொகைக்கான வாய்ப்பு கிடைத்தது; இது அவரது கல்விசார் சாதனைகளுக்குக் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகிறது.
