மதுரை, ஆக. 11- திண்டுக்கல் மாவட்டம், பூலாம்பட்டியை சேர்ந்த பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:-
பழநி மலைக்கோயில் அடிவாரத்தில் 1.77 ஏக்கர் பரப்பளவில் பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் மடம் உள்ளது, இது கவுமார மடாலயத்திற்கு சொந்தமானது. இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பீடு சுமார் ரூ.150 கோடி. மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாறவும், வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கும், உணவு உள்ளிட்ட பயன்பாடுகளுக்காகவும் இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை உடுமலை பகுதியைச் சேர்ந்த அம்பிகா, திண்டுக்கல் பாஜ பிரமுகர் கனகராஜின் மனைவி கலாமணி உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு செய்து அதில் வணிக நிறுவனங்கள், வாடகை வாகன நிறுத்தும் இடங்கள் வைத்து நடத்தி வருகின்றனர்.
மேலும் மடத்திற்கு சொந்தமான சொத்தை 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தமும் போட்டுள்ளனர். மத நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை அய்ந்து ஆண்டுகளுக்கு மேல் தனிநபருக்கு குத்தகை பதிவு செய்ய முடியாது என்பது விதி. இதனை மறைத்து மோசடியாக குத்தகை பத்திரங்கள் போடப்பட்டுள்ளது.
எனவே, குத்தகை பத்திரங்களை ரத்து செய்து ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகளை மீட்டு பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன் நேற்று (10.8.2026) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘கோயில் நிலங்களை மோசடியாக குத்தகை பதிவு செய்து தனிநபர்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர். இது சட்டவிரோதம். மடத்தின் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்’’ என வாதிடப்பட்டது. அரசு தரப்பில், ‘‘இதே கோரிக்கையுடன் மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் மனுவிற்கு அறநிலையத்துறை ஆணையர், திண்டுக்கல் ஆட்சியர், கவுமார மடம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மற்ற மனுக்களையும் சேர்த்து ஒன்றாக பட்டியலிடக் கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.
