வாசிங்டன், ஆக. 8- அமெரிக் காவில் பிறக்கும் ஏறக்குறைய அனைவரும் அந்நாட்டின் குடி மக்களே என்ற 100 ஆண்டுகளுக்கும் மேலான புரிதலை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்க உச்சநீதிமன்றம் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை கடந்த ஜூன் 30ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பிறப்பு அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பிறப்புரிமை குடியுரிமைக்கு தகுதியானவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அதிபர் டிரம்ப் இரண்டு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். வணிக ரீதியான பிறப்புச்சுற்றுலாவில் ஈடுபடுபவர்களை இந்த உத்தரவு குறிவைக்கிறது. இவர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
மற்றொரு உத்தரவானது பிறப்புரிமை குடியுரிமைக்கு தகுதியற்றவர்கள் என்று கருதப் படுபவர்களின் வரையறையை விரிவுபடுத்துகிறது. வெளிநாட்டு அரசுகளுக்காக பரிந்துரை அல்லது ஆதரவு பணிகளை மேற்கொள்ளும் வெளிநாட்டினரின் குழந்தைகள் இதில் அடங்குவர். நிர்வாக உத்தர வில் கையெழுத்திட்ட பின்னர் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘பிறப்புரிமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மிகவும் எதிர்பாராத ஒரு தீர்ப்பு வந்தது. அது மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமைந்தாலும், மிகவும் பாதிப்பு தருகின்ற முடிவாக இருந்தது.
எனவே நாங்கள் சில மாற்றங் களை செய்கிறோம். 1868ம் ஆண்டு ஜூலை 9 அன்று அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பின் 14ஆவது திருத்தச் சட்டம், முன்னாள் அடிமைகள் உள்பட அமெரிக்காவில் பிறந்த அல்லது இயல்புரிமை பெற்ற அனைத்து நபர்களுக்கும் குடியுரிமை வழங்கியது. இது உள்நாட்டுப் போருக்குப் பின் செய்யப்பட்டது. இது அடிமை களின் குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. இப்போது என்ன நடக்கிறது? மக்கள் இதனை வைத்து வணிகம் செய்கிறார்கள்” என்றார்.
