சென்னை, ஆகஸ்ட் 1 மின்கட்டண உயர்வு தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் குறித்து விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக மேனாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மேனாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் அளித்த பேட்டி:
“மின்கட்டண உயர்வு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், ‘வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை வைத்து தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்’ என்று கூறுகிறார். திமுக தலைவரின் அரசியல் அனுபவம், வயது மற்றும் அவர் வகித்த பதவிகள் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட பிறகே அவர் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர் நிர்மல் குமார் இனிமேல் இத்தகைய நையாண்டிப் பேச்சைத் தவிர்த்துவிட்டு, எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கப் பழக வேண்டும். மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற வேண்டுமென்றால், வெறும் பெயர் மாற்றங்களால் மட்டுமே முடியாது; மக்கள் நலனுக்காகச் செய்யப்படும் திட்டங்களாலும் செயல்பாடுகளாலும் மட்டுமே அது சாத்தியமாகும்.” தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கே வர வேண்டாம் என கருநாடக முதலமைச்சர் கூறுகிறார் என்றால், தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒருவர் ‘விஜய் அங்கு வரப் போகிறார்’ என்ற தகவலைத் தெரிவித்திருக்க வேண்டும். அதனால் தான் தற்போது வர வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை வெளிப்படையாகப் பேசாமல், இப்படி மறைத்து மறைத்து பேச வேண்டிய அவசியம் என்ன? இப்போதும் இந்த அரசு கள்ள மவுனம் காத்து வருகிறது.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் அமைதியாக இருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் எவ்வித கொந்தளிப்பும் ஏற்படாது என அரசு நினைக்கிறது. ஆனால், அரசின் இந்த மவுனமே ஒருகட்டத்தில் மக்களுக்கு எதிராக மாறி, பெரும் புரட்சியாக வெடிக்கும்” என்று எச்சரித்தார்.
