இந்தியாவில் ‘பின்னோக்கி’ப் பாயும் ஒரே நதி புவியியல் விதியையே தலைகீழாக மாற்றிய விசித்திரம்!

2 Min Read

இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் இமய மலையிலோ அல்லது மத்திய உயர்நிலங்களிலோ தோன்றி, கிழக்கு நோக்கி பயணித்து வங்காள விரிகுடாவில் கலப்பது வழக்கம். ஆனால், இந்த விதியை உடைத்து, மேற்கு நோக்கி பாயும் நதிதான் நர்மதை. இந்தியாவின் அய்ந்தாவது நீளமான நதியான இது, சுமார் 1,310 கிலோமீட்டர் தூரம் பயணித்து அரபிக்கடலில் கலக்கிறது.

இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் கிழக்கு நோக்கிச் செல்லும்போது, நர்மதை மட்டும் அரபிக்கடலை நோக்கி ஓடுவது ஏன்? இதற்கு பின் ஒரு ‘கிளாசிக்’ புவியியல் ரகசியம் இருக்கிறது.

நர்மதை நதி ‘பிளவுப் பள்ளத்தாக்கு’ (Rift Valley) வழியாகப் பாய்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவித்தட்டுகள் நகர்ந்தபோது உருவான இந்தப் பள்ளத்தாக்கு, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சரிவாக அமைந்துள்ளது. வடக்கே விந்திய மலைத்தொடரும், தெற்கே சாத்புரா மலைத்தொடரும் நர்மதையை ஒரு குறுகிய பாதைக்குள் வைத்து வழிநடத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிலத்தின் சரிவு எப்படி இருக்கிறதோ, நர்மதை அதை நோக்கியே ஓடுகிறது!

மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டக் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் நர்மதை தனது பயணத்தைத் தொடங்குகிறது. சுமார் 1,310 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்நதி, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. இறுதியில் குஜராத்தின் பருச் நகருக்கு அருகே பேருரு எடுத்து அரபிக்கடலில் கலக்கிறது. மற்ற ஆறுகளைப்போல இது டெல்டாக்களை உருவாக்காமல், நேரடியாகக் கடலில் கலக்கும் கழிமுகத்தை (Estuary) உருவாக்குவது இதன் தனிச்சிறப்பு.

நர்மதை நதி வெறும் நீரோட்டம் மட்டுமல்ல, அது ஒரு கலைப் புதையல். ஜபல்பூர் அருகே உயரமான வெள்ளை மார்பிள் பாறைகளுக்கு இடையே நதி பாயும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. இங்கு நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்போது பனிமூட்டம் போலப் புகையெழும். இதனாலேயே இதற்கு ‘துவாந்தார்’ (புகையிறங்கும் இடம்) என்று பெயர்.

நர்மதையின் வேகம் எளிதானது கிடையாது. அதன் ஆற்றலைப் பயன்படுத்தவே சர்தார் சரோவர் அணை போன்ற உலகப் புகழ்பெற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசனமும், கோடிக்கணக்கான மக்களுக்கு மின்சாரமும் வழங்கினாலும், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் குறித்த விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *