புதுடில்லி, ஜூலை 2 மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் இடைக்கால விவரங்கள் அல்லது பிற தரவுகளை ஊடகங்களுக்கோ அல்லது வேறு எந்த அதிகார அமைப்பிற்கோ வெளியிடக் கூடாது என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்ஜய் குமார் நாராயண் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அனைத்து மக்கள் தொகை செயல்பாட்டு இயக்கு நரகங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தரவுகளைப் பகிரக் கூடாது
1948ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முற்றிலும் ரகசியமானவை.
ஒன்றிய அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தத் தரவுகளை யாருக்கும் பகிரக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க உள்ளன. இதற்கு முன்னதாக, முதல்கட்டமாக வீடுகள் மற்றும் குடியிருப்புகள் கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இப்பணிகள் தற்போது நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.
முக்கிய அம்சம்
இந்தமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு பெரும்பாலும் மொபைல் செயலி (Mobile App) மூலம் டிஜிட்டல் முறையிலேயே நடத்தப்படுகிறது. எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே காகிதப் படிவங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
