சென்னை, ஜூன் 21 நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போராட்டம் செய்யவிடாமல் மறித்துக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் பிடித்து இழுத்ததில் ஒரு மாணவர் தோள்பட்டை மூட்டு விலகியது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 3ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகாரை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (21.6.2026) மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இதனிடையே நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. மேலும் நீட் தேர்வில் இதுவரை பலமுறை முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதால் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் உள்பட பலர் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேவையில்லை, மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலுயுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று (20.6.2026) ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்ய தொடங்கியதும் மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
