புதுடில்லி, ஜூன் 19 உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கு மனு ஒன்று காணாமல் போன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மிகத் தீவிரமான பிரச்சினை என்றும், இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் 17.6.2026 அன்று வழக்கம்போல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, வழக்குரைஞர் சுபிசிவானி ஜெய்தீப் என்பவர் ஒரு திடுக்கிடும் முறையீட்டை முன்வைத்தார்.
“கடந்த மாதம் 8-ஆம் தேதி அவசர விசாரணை கோரி மனு ஒன்றை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தேன். ஆனால், அந்த மனு நீண்ட நாட்களாக விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை. இதுகுறித்து நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, நான் தாக்கல் செய்திருந்த மனுவைக் காணவில்லை என்று அலட்சியமாகப் பதிலளித்தார்கள்” என்று புகாராகத் தெரிவித்தார்.
தலைமை நீதிபதியின் உத்தரவு
வழக்குரைஞரின் இந்த முறையீட்டைக் கேட்டு கடும் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்த விவகாரம் மிக மிகத் தீவிரமானது என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில்:மனு தாக்கல் செய்யப்பட்டதற்கான அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு, இன்றே (நேற்று முன்தினம்) தனது அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்குமாறு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
உயர்தரப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் முறைகள் கொண்ட உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே, தாக்கல் செய்யப்பட்ட மனு காணாமல் போன நிகழ்வு வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
