சென்னை, ஜூன் 18- தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் அமையவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில், புதிய ‘விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மய்யம்’ அமைப் பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
இத்திட்டம் குறித்த ஒப்பந்த நகலை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களிடம் காட்டி அமைச்சர், அதிகாரிகள் வாழ்த்துப் பெற்றுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (17.6.2026) நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் விஜயகுமார், மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்தனர்.
கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று, தமிழ்நாடு அரசும் – இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மய்யமும் (IN-SPACe) இணைந்து இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த அதிகாரப்பூர்வ ஒப்பந்த நகலை முதலமைச்சரிடம் காண்பித்து அவர்கள் வாழ்த்துப் பெற்றனர்.
திட்டத்தின் முக்கியத்துவம்
விண்வெளி தொழிற்பூங்கா: தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் அமையவுள்ள இந்த விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்கா, tதமிழ்நாட்டை விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப வசதி மய்யம்
இப்பூங்காவில் அமையவுள்ள ‘விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மய்யம்’, விண்வெளி வாகனத் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்குத் தேவையான அதிநவீனப் பொது உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்.
இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில் முதலீடுகள் பெருகுவதுடன், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் எனத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
