விழுப்புரம், ஜூன் 13– விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஈவ் டீசிங் புகார் விசாரணைக்காக வந்த 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை, பெண் காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈவ் டீசிங்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்குச் சென்று வரும் வழியில் 17 வயது சிறுவன் ஒருவன் தன்னைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து தொல்லை (ஈவ் டீசிங்) செய்வதாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாணவி மீது தாக்குதல்?
இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக மாணவியும் அவரது பெற்றோரும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, அங்கு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் திடீரென மாணவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலால் நிலைதடுமாறிய மாணவி, காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், மயக்கமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல் நிலையத்திலேயே…
இந்நிகழ்வு குறித்துத் தகவல் அறிந்து செய்தியாளர்கள் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த கதவுகள் மூடப்பட்டதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இதற்கிடையே, பாதுகாப்பும் நீதியும் தேடி வந்த பள்ளி மாணவியைக் காவல் நிலையத்திற்குள்ளேயே தாக்கிய நிகழ்வு குறித்து, சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது. தற்போது மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் குறித்த விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், காவல் நிலையத்திலேயே சிறுமிக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பலத்த கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
