ஜாதியத் தடையைத் தகர்த்து
அமைச்சர் வன்னிஅரசு நடவடிக்கை!
கோவை, ஜூன் 8- கொங்கு மண்டலத்தில் இன்னும் நவீன முறையில் தீண்டாமை நீடிக்கிறது என்பதற்கு சாட்சியாக இருந்த கெம்பனூர் கிராமத்தின் ஜாதிப் பாகுபாடு சுவர் 21 ஆண்டுகளுக்குப் பின் உடைந்துள்ளது.
அரசுப் பேருந்துப் போக்குவரத்து
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில் பட்டியலின மக்கள் வசிக்கும் ‘அண்ணா நகர்’ பகுதிக்குள் கடந்த 21 ஆண்டுகளாக அரசுப் பேருந்து செல்லாமல் திருப்பி விடப்பட்டு வந்தது.
ஜாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை மனநிலையே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசுத் திட்டங்களை ஆய்வு செய்ய வந்த சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் வன்னிஅரசுவை அண்ணா நகர் மக்கள் சந்தித்து தங்களது 21 ஆண்டு கால மனுவை அளித்தனர்.
“அரசின் பொதுச் சேவை ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது” எனக் கூறிய அமைச்சர், உடனடியாக கோவை டிஎன்எஸ்டிசி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அழைத்து அண்ணா நகருக்குள் பேருந்தை இயக்க உத்தரவிட்டார்.
அமைச்சரின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, இன்று (8.6.2026) முதல் காந்திபுரம் முதல் கெம்பனூர் வரை இயங்கும் நகரப் பேருந்து எண் 21, அனைத்து ஜாதித் தடைகளையும் தகர்த்து அண்ணா நகர் பகுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது.
21 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் தெருவுக்குள் அரசுப் பேருந்து வந்ததைக் கண்ட மக்கள், பேருந்துக்கு மலர் தூவியும், ஓட்டுநர்-நடத்துநருக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜாதியப் பாகுபாட்டை உடைத்து சமூக நீதியை நிலைநாட்டிய இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சேவை என்பது அனைவருக்கும் சமம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
