போபால், ஜூன் 6- மத்தியப்பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின்’ பெயரை, அம்மாநில பாரதிய ஜனதா அரசு ‘வாக்தேவி பல்கலைக்கழகம்’ என மாற்றம் செய்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பிரபல சுதந்திரப் போராட்ட தியாகி மவுலானா முகமது பர்கத்துல்லா போபாலி. இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, போபாலில் 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘போபால் பல்கலைக்கழகம்’, கடந்த 1988-ஆம் ஆண்டு அப்போதைய அரசால் ‘பர்கத்துல்லா பல்கலைக்கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஹிந்துத்துவ அமைப்பினரும் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்தின் பெயர் ‘வாக்தேவி’ என மாற்றப்பட்டுள்ளது. ‘வாக்தேவி’ என்பது இந்து மதக் கடவுளான சரஸ்வதியைக் குறிக்கும் சொல்லாகும். மேலும், 11-ஆம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவின் மால்வா பிராந்தியத்தை ஆண்ட இந்து மன்னரான போஜராஜன் (போஜ்பால் என்றும் அழைக்கப்படுபவர்), போபால் நகரத்தை நிறுவினார் என்று கூறப்படுகிறது. எனவே, போபால் நகரின் வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நோக்கில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களின் பெயர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
