நியூயார்க், மே 30- அய்.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது அறிவிக்கப் பட்டு உள்ளது.
கடந்த 1948ஆம் ஆண்டில் அய்.நா. அமைதிப் படை தொடங்கப்பட்டது. அய்.நா. சபையின் 120 உறுப்பு நாடுகளை சேர்ந்த 97,000 வீரர்கள் அமைதிப் படையில் பணியாற்றி வருகின்றனர். சமீபத்திய புள்ளி விவரத்தின்படி சுமார் 5,000 இந்திய வீரர்கள் அய்.நா. அமைதிப் படையில் உள்ளனர். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு உள்ள காங்கோவில் அய்.நா. அமைதிப் படை முகாமிட்டு உள்ளது.
அந்த நாட்டில் பணியாற்றிய இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அமைதிப் பணியின்போது உயிரிழந்தார். இதேபோல அய்.நா. அமைதிப் படை சார்பில் தெற்கு சூடானில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் சுஜித் குமார் பிரதான் உயிரிழந்தார். ஆண்டு தோறும் மே 29ஆம் தேதி அய்.நா. அமைதிப் படை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு அய்.நா. அமைதிப் படையில் உயிரிழந்த வீரர்களுக்கு “டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்” என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு அய்.நா. அமைதிப் படை நாளை முன்னிட்டு வீரமரணம் அடைந்த இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு “டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்” அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பெண்
அதிகாரிக்கு விருது
அய்.நா. அமைதிப் படையில் உள்ள இந்திய ராணுவ பெண் அதிகாரி மேஜர் அபிலாஷா பராக், லெபனானில் முகாமிட்டு உள்ளார். அங்கு பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றத்துக்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அவரது சேவையை கவுரவிக்கும் வகையில், “மிலிட்டரி ஜென்டர் அட்வகேட் ஆப் தி இயர்” விருது அபிலாஷா பராக்குக்கு அறிவிக்கப் பட்டு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள அய்.நா. சபையின் தலைமை அலுவலகத் தில் விரைவில் நடைபெற உள்ள விழாவில் இந்தியர்கள் உட்பட 59 பேருக்கு அய்.நா. சபை பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் விருதுகளை வழங்க உள்ளார். உயிரிழந்த இந்திய வீரர்கள் சார்பில் அவர்களின் குடும்பத்தினர் விருதுகளை பெற்றுக் கொள்வார்கள்.
