ஒரு நாட்டின் வரலாறும், தற்கால நிகழ்வுகளும் சில நேரங்களில் வியப்பளிக்கும் வகையில் ஒத்துப் போகின்றன. தங்களின் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்திற்கும், அரசிற்கும் துரோகம் இழைப்பவர்களின் செயல்கள் காலம் கடந்தும் வரலாற்றின் பக்கங்களில் கரும்புள்ளிகளாகவே அமைகின்றன. மராட்டியப் பேரரசர் சத்திரபதி சிவாஜியின் காலம் தொட்டு இன்றைய நீட் தேர்வு முறைகேடுகள் வரை, ‘குல்கர்னி’ என்ற அடையாளத்தைக் கொண்ட குறிப்பிட்ட நபர்களின் செயல்பாடுகள் எவ்வாறு துரோகத்தின் வரலாற்றை நினைவூட்டுகின்றன என்பதை விவரிப்பதே இக்கட்டுரையாகும்.
சத்திரபதி சிவாஜி மற்றும் கிருஷ்ண குல்கர்னி பார்ப்பனரின் வரலாற்றுத் துரோகம்!
வரலாற்றுப் புகழ்பெற்ற பிரதாப்காட் போரின்போது, பீஜப்பூர் சுல்தானகத்தின் தளபதியான அப்சல்கான், சத்திரபதி சிவாஜியைச் சந்தித்துப் பேசுவதாகக் கூறி வரவழைத்து, ஏமாற்றிக் கொல்ல முயன்றார். ஆனால், ஆபத்தை உணர்ந்த சிவாஜி, தனது அங்கியின் கீழ் மறைத்து வைத்திருந்த புலிநகத்தால் அப்சல்கானின் வயிற்றைக் கிழித்து இதயத்தை பிடிங்கி அவனை வீழ்த்தினார்.
அப்சல்கான் வீழ்த்தப்பட்டதைக் கண்ட அவனது முதன்மை நிர்வாக அதிகாரியும் வழக்குரைஞருமான கிருஷ்ண பாஸ்கர் குல்கர்னி என்பவர், சிவாஜியை நோக்கி வாளை ஓங்கிப் பாய்ந்தார். அப்போது சிவாஜி, “நான் பிராமணர்களைக் கொல்ல மாட்டேன், அது எனக்குப் பெரும் பாவத்தைச் சேர்க்கும்” என்று கூறி அவனது வாள்வீச்சைத் தடுத்து நிறுத்தினார்.

தன்னை ஏமாற்றிக் கொல்லத் துணிந்த கிருஷ்ண குல்கர்னியைத் தானே தண்டிக்க விரும்பாத சிவாஜி, அவரைத் தனது நம்பிக்கைக்குரிய பாதுகாவலரான போஜ் வாக்மாரே என்பவரிடம் ஒப்படைத்தார். தாழ்த்தப் பட்டச் சமூகத்தைச் சேர்ந்த வீரரான போஜ் வாக்மாரே, சிவாஜியின் உயிரைக் காக்கும் உன்னதப் பணியில் துணையாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் பேராசையாலும், அதிகார மோகத்தாலும் இழைக்கப்பட்ட துரோகமும், மறுபுறம் எளிய சமூகத்தைச் சேர்ந்த வீரரின் விசுவாசமும் அன்றே வரலாற்றில் பதிவாகின.
தற்கால நீட் தேர்வு முறைகேடும்,
பி.வி.குல்கர்னியின் துரோகமும்!
அன்று சிவாஜியின் காலத்துத் துரோகம் ஒரு மன்னருக்கு எதிரானது என்றால், இன்று அரங்கேறியுள்ள துரோகம் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் எதிர்காலத்திற்கு எதிரானது.
மருத்துவக் கனவுகளோடு இரவு பகலாகப் படித்துக் காத்திருக்கும் மாணவர்களின் வாழ்க்கையைச் சிதைக்கும் வகையில் அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த விசாரணையில், பி.வி.குல்கர்னி என்ற பேராசியரின் பெயர் முதன்மையாகக் குற்றஞ் சாட்டப் பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடங் கப்பட்ட நாள் முதலே வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், தனது பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல கோடி ரூபாய்க்கு வினாத்தாள்களைப் பெரிய தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியாக விற்றுள்ளார்.
லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பையும், அவர்களின் பெற்றோர்களின் மருத்துவக் கனவையும் காசாக்கியுள்ளார்.
பணம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, தகுதியற்றவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வழிவகை செய்து, தகுதியான மாணவர்களின் வாழ்க்கையைக் காவு வாங்கியுள்ளார்.
காலங்கள் மாறினாலும், மனிதர்களின் உருவங்கள் மாறினாலும் சுயநலமும் துரோகமும் மாறுவதில்லை என்பதற்கு கிருஷ்ண குல்கர்னி முதல் பி.வி.குல்கர்னி வரையிலான நிகழ்வுகள் சான்றாக நிற்கின்றன. அன்று சத்திரபதி சிவாஜிக்கு எதிராக இழைக்கப்பட்ட துரோகம் எப்படி முறியடிக்கப்பட்டதோ, அதேபோல இன்று ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுத் துரோகமும் சட்டத்தின் முன் அம்பலப்படுத்தப்பட்டு, கடுமையான தண்டனையின் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
