கவுஹாத்தி, மே 26 அசாம் முதலமைச்சராக பாஜ தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 13ஆம் தேதி இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று (25.5.2026) அசாம் சட்டப்பேரவை கூடியது. அப்போது பொது சிவில் சட்ட மசோதா 2026 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், ரைஜோர் தளம், திரிணாமல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா குறித்து பேசிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “பொது சிவில் மசோதா விவாகரத்து, வாரிசு மற்றும் ‘திருமணம் செய்யாமல் இணைந்து வாழும்’ (‘லிவ் இன்’) உறவுகளை நிர்வகிக்கும் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
முக்கியமாக, திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது, பலதார மண தடை, பெற்றோரின் சொத்தில் மகள்களுக்கு சம உரிமை மற்றும் ‘திருமணம் செய்து கொள்ளாது இணைந்து வாழும் உறவுகள்’ தொடர்பான நான்கு விவகாரங்களை உள்ளடக்கி இருக்கும்” என்றார். இருப்பினும் அசாமில் வசிக்கும் எந்தவொரு பழங்குடியினத்தவருக்கும் இந்த மசோதா பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் மசோதா நாளை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உரங்களின் விலை உயர்வு”
நிர்மலா சீதாராமன் கவலை!
புதுடில்லி, மே 26 உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தற்போது பன்னாட்டுச் சூழலால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உரங்களின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதார சமநிலையைப் பேண நாம் எரிபொருள், உரங்கள் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
அதேநேரத்தில், தற்போது ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது, நம் நாட்டுக்கு வெளிநாட்டு சந்தையில் சில புதிய சவால்களை உருவாக்கி வருகிறது.
“மேற்காசிய பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகளவில் அனைத்து தரப்பினரும் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” என்று நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதி அமைச்சர்.
உலகளாவிய இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த ஒன்றிய அரசு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
