கரோனாவுக்கு பிறகு, ஏராளமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுரையீரலை பத்திரமாக பாதுகாக்க என்ன செய்வது? என்பதற்கான முக்கிய அறிவுரைகள்.
நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள் என்ன?
சளி, இருமலுடன் காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்படலாம். இருதய கோளாறு, குருதிச் சோகை உள்ளவர்களுக்கும், மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூச்சிரைப்பு அதிகமாக இருத்தல், ஸ்டீராய்டு மருந்துகள் நீண்ட காலமாக எடுத்துக் கொண்டிருப் பவர்கள், சளியுடன் குருதி, உடல் எடை குறைதல் ஆகியவை, நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்.
மூச்சுப் பயிற்சி, நுரையீரலை
பாதுகாக்க உதவுமா!
கண்டிப்பாக உதவும். புகைபிடிப்பதை கைவிட்டவர்கள், டி.பி., கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள், சாதாரண நபர்களும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதனால் நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை, நிலையானதாக இருக்கும். நுரையீரலை பாதுகாக்க உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, நடை பயிற்சி அவசியம்.
புகைப்பிடித்தல் தவிர, இதர காரணங்களால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுமா?
சுற்றுச்சூழல் மாசுபட்டிருந்தால் நமது வாய், மூச்சு வழியாக கிருமிகள் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படலாம். அந்தந்த தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு, அதில் ஏற்படும் மாசுவால், நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நுரையீரல் பாதிப்புக்கும்,
இருதயத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
நீண்ட காலம் நுரையீரல் பாதிப்பு இருந்தால், பிற உறுப்புகளுக்கு ஆக்சிஜன் எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படலாம். இதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஆரோக்கியமான நுரையீரலுக்கான அளவுகோல் என்ன?
இது மனிதர்களுக்கு மனிதர், உடல் எடை, உயரம், எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு ஏற்ப மாறுபடும். நுரையீரல் திறன் பரிசோதனை வாயிலாக, இதை அறியலாம். தோராயமாக, 30 நொடி முதல் ஒரு நிமிடம் வரை, மூச்சை அடக்கும் திறன் பெற்று இருந்தால், ஓரளவு ஆரோக்கியமான நுரையீரலை கொண்டுள்ளார் என அறியலாம். துல்லியமாக அறிய சிறந்த பரிசோதனைகள் அவசியம்.
