சென்னை, மே 25 இந்திய ரயில்வேக்கு ரூ.15 ஆயிரம் கோடி மின்சார பாக்கி எதிரொலியாக ரயில் கட்டணம் உயர்த்தப் படும் அபாய சூழல் எழுந்துள்ளது.
மின்சார கட்டணம் பாக்கி
இந்தியாவில் தினமும் கோடிக்கணக் கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர்.
ரயில் போக்குவரத்து இயல்பாக நடைபெற லோக்கோமோட்டிவ் சிக்னல் விளக்குகள், நிலைய வசதிகள் இவை அனைத்துக்கும் மின்சாரம் வேண்டும்.
இந்த மின்சாரத்தை ரயில்வே நேரடியாக சந்தையில் இருந்து வாங்குகிறது. இப்படி நேரடியாக வாங்குமு்போது மின்சார நிறுவனங்களுக்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் 2015ஆம் ஆண்டு முதலே ரயில்வே இந்த கட்டணத்தை செலுத்த மறுத்து வந்தது.
‘‘நாங்கள் சாதாரண நுகர்வோர் இல்லை, நாங்களே ஒரு மின்சார விநியோக நிறுவனம் போன்றவர்கள். ஏனென்றால் நாங்களே தண்டவாளங்களுக்கும் நிலையங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்கிறோம். எனவே எங்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது ” என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒன்றிய மின்சார ஆணையம் ரயில்வேக்கு சாதகமாக தீர்ப்பும் கொடுத்தது. அதனால் ரயில்வே பத்து ஆண்டுகளாக கட்டணம் கட்டாமல் தப்பித்து வந்தது.
ஆனால் மாநில மின்சார நிறுவனங்கள் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றன. இறுதியில் உச்ச நீதிமன்றம் இந்த மே மாதம் தெளிவான தீர்ப்பு கொடுத்தது. ‘‘மின்சார விநியோக நிறுவனம் என்று அழைக்கப்பட வேண்டுமென்றால், வெளி மக்களுக்கும் மின்சாரம் விற்க வேண்டும். ரயில்வே வாங்கும் மின்சாரம் முழுவதும் தனக்காகவே பயன்படுத்திக் கொள்கிறது. எனவே ரயில்வே ஒரு சாதாரண நுகர்வோரே எனவே கட்டணம் கட்டியே ஆக வேண்டும்” என்று தெளிவாக கூறி விட்டது.
இந்த உத்தரவால் ரயில்வேக்கு கடும் பண சுமை ஏற்பட்டுள்ளது இந்திய ரயில்வே ஆண்டுக்கு 33 பில்லியன் யூனிட் மின்சாரம் உபயோகிக்கிறது. இது நாட்டின் மிகப்பெரிய மின்சார நுகர்வோர்களில் ஒன்று. யூனிட்டுக்கு ரூ.0.50 முதல் ரூ.2.50 வரை கட்டணம் என்று வைத்தாலும், பத்து ஆண்டு நிலுவை கணக்கில் சேர்ந்து மொத்தம் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ஆகிறது. இது ஒரு சிறிய தொகை இல்லை புதிய ரயில் வாங்கவோ, தண்டவாளம் அமைக்கவோ பயன்படுத்தக்கூடிய பெரும் தொகை ஆகும்.
கட்டணம் உயரும் அபாயம்
ரயில்வே இந்த பெரும் தொகை கட்ட வேண்டி வரும்போது, அந்த நட்டத்தை ஈடுகட்ட பயணச்சீட்டு விலையை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. போதுமான நிதி இல்லாததால் புதிய ரயில்கள், நவீன வசதிகள், தண்டவாள மேம்பாட்டு திட்டங்கள் தாமதமாகும் அபாயம் உள்ளது.
