சென்னை, மே 18 மின் கட்டணத்தை வங்கி கணக்கு மூலம் இணைய வழியில்செலுத்தும் நுகர்வோருக்கு புதிய வசதியை www.tnpdcl.org மூலம் தமிழ்நாடு மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வீடுகளுக்கான மின் பயன்பாடு, ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. அவ்வாறு கணக்கெடுக்கும் நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இந்தக் காலக்கெடு கடந்தால் எவ்வித அறிவிப்புமின்றி மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்படும். பின்னர், அபராதத்துடன் கட்டணம் செலுத்திய பின் மட்டுமே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.
இந்தச் சூழலில், பலர் வேலைப்பளு மற்றும் மறதி போன்ற காரணங்களால் குறிப்பிட்ட மின் கட்டணத்தை செலுத்த தவறிவிடுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், தற்போது மின்வாரியம் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் முறையை தொடங்கியுள்ளது.
இந்த வசதியைப் பெற விரும்பும் நுகர்வோர்கள், மின் வாரியத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான ‘www.tnpdcl.org’ என்ற இணையதளத்திற்கு சென்று, ‘பேமென்ட்’ பகுதியில் உள்ள ‘EB Auto Pay’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் மின் இணைப்பு எண்ணை உள்ளீடு செய்து, விவரங்களைச் சரிபார்த்து, பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணைப் பதிவிட வேண்டும்.
அதன்பின், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், இனிவரும் காலங்களில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட நாளில் இருந்து 10 ஆவது நாளில், நுகர்வோரின் மின்கட்டணத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்தப் பிரிவில் (Low Tension) உள்ள அனைத்து மின்நுகர்வோரும் இந்த எளிய நவீன வசதியைப் பயன்படுத்திப் பலன் பெறலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
