புதுடில்லி, மே 18- உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையிலுள்ள முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால சிறைத்தண்டனை நிறுத்த உத்தரவை (இடைக்கால பிணை) உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு:
2 மாதங்களில் விசாரிக்க உத்தரவு
குல்தீப் சிங் சேங்கரின் மேல்முறை யீட்டு மனுவை டில்லி உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் நிபந்தனை: மேல் முறையீட்டு விசாரணை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையாமல் தாமத மானால், தண்டனையை நிறுத்திவைக்கும் கோரிக்கையை உயர்நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்கலாம்.
உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
முன்னதாக, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் சேங்கருக்கு எதிரான “கடுமையான பாலியல் வன்கொடுமை” குற்றச்சாட்டு பொருந்தாது என்று டில்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“குழந்தைகளை பாலியல் சுரண்டலி லிருந்து பாதுகாக்கும் சட்டத்தை மிகத் தொழில்நுட்ப ரீதியாக அணுக முடியாது” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
