சென்னை, மே 17 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில், இந்திய குடியுரிமையை ரத்து செய்துவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பலர் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு (Immigration Officers) அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணிக்க வரும் பயணிகளின் கைவிரல்களைக் கண்காணித்து, வாக்களித்ததற்கான அடையாள மை இருந்தால் அவர்களைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் (15.5.2026) இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த கிஷோர் (64) என்பவர் அமெரிக்க பாஸ்போர்ட்டுடன் பயணிக்க வந்தார்.
அவரது இடது கை ஆள்காட்டி விரலைச் சோதித்தபோது, அதில் தேர்தல் மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக வாக்களித்தது உறுதியானது. இதையடுத்து அவரது பயணம் ரத்து செய்யப் பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் இலங்கை குடியுரிமை பெற்ற
2 பேர் பிடிபட்டனர்
இதேபோல் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில், கொழும்பு செல்லவிருந்த கிருஷ்ணசாமி (62) என்பவர் அதிகாரிகளிடம் பிடிபட்டார். இலங்கை குடியுரிமை பெற்ற இவர், தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்தது தெரியவந்தது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை குடியுரிமை பெற்ற மேரி ஜெனோ (64) என்ற பெண்ணும் சட்டவிரோதமாக வாக்களித்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.
சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், வெளிநாட்டு குடியுரிமை பெற்று சட்டவிரோதமாக வாக்களித்ததாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்களித்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட்டு வருவது விமான நிலையங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
