நியூயார்க், மே 12- அமெரிக் காவில், கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர், 176 மாணவர்களின் கல்விக் கடனை தானே அடைப்பதாகக் கூறி, ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
அமெரிக்காவின், வடக்கு கரோலினா மாகாணத்தில், ‘ வில்சன் ஸ்கூல் ஆப் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற கல்லுாரியின் பட்டமளிப்பு விழா, கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் கோச்சர் கலந்து கொண்டார்.
மாணவர்கள் மத்தியில் உரை யாற்றிய அவர், இறுதியில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதாவது, “பட்டம் பெறும் 176 மாணவர்களின் இறுதியாண்டு கல்விக் கடனை நானும் என் மனைவி மர்லினும் முழுமையாக செலுத்தி விடுகிறோம்,” என்று அவர் கூறியவுடன், அரங்கம் அதிரும் வகையில் கைத்தட்டல்கள் எழுந்தன.
கல்விக் கடன் என்ற சுமை இல்லாமல், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை துணிச்சலாக தொடங்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என அனில் கோச்சர் தெரிவித்தார்.
அனில் கோச்சரின் தந்தை பிரகாஷ் சந்த் கோச்சர், 1946ம் ஆண்டு பஞ்சாபிலிருந்து அமெரிக்கா வந்தவர். இதே கல்லுாரியின் இரண்டாவது இந்திய மாணவர் அவர்.
இது குறித்து அனில் கோச்சர் பேசுகையில், “80 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை இங்கு வந்த போது, இந்த நாடு அவரை இருகரம் நீட்டி வரவேற்றது. அவர் கண்ட கனவுதான் இன்று என்னை இந்த உயரத்தில் நிறுத்தியுள்ளது,”என்றார்.
