புதுடில்லி, மே 10- நாட்டில் தற்போது வாக்குரிமை அடிப்படை உரிமையாக இல்லை என பிரபல பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் ‘அனைவருக்கும் பொதுவான வாக்குரிமை’ (Universal Adult Franchise) என்ற கோட்பாடு தற்போது இறந்து புதைக்கப்பட்டுவிட்டது. மேற்கு வங்கத்தில் 27 லட்சம் தகுதியான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது நாட்டு மக்களின் மிகப்பெரிய கவலையாக மாறவில்லை என்றால், நம்மை ஒரு ஜனநாயக நாடு என்று அழைத்துக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேற்கு வங்கத்தில் இந்த 27 லட்சம் குடிமக்கள் வாக்களிக்க அனு மதிக்கப்பட்டிருந்தால் அங்கு தேர்தல் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பது இங்கு கேள்வியல்ல. மாறாக, இந்திய மக்களை இப்போது இரண்டு வகைகளாகப் பிரிக்க முடியும் என்பதுதான் நம்மை கவலையடையச் செய்ய வேண்டும்.
ஒரு தரப்பினர் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றவர்கள், மற்றொரு தரப்பினர் அவ்வப்போது அந்த உரிமையைப் பறிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்.
வாக்குரிமை என்பது இப்போது ஓர் அடிப்படை உரிமையாக இல்லாமல், அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ‘தர்க்கரீதியான’ நடைமுறைகள் மூலம் வழங்கப்படும் ஒரு சலுகையாக மாறிவிட்டதா? என்ற கேள்வி எழுகிறது” என அவர் குற்றம் சாட்டினார்.
