தமிழ்நாட்டில் ‘‘நிலையான ஆட்சி’’ அமைவதே தி.மு.க.வின் நோக்கம்!
அவசர முடிவுகளை உடனடியாக எடுக்க
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம்!
சென்னை, மே 8– தமிழ்நாட்டில் ‘‘நிலையான ஆட்சி’’ அமைவதே தி.மு.க.வின் நோக்கம்! அவசர முடிவுகளை உடனடியாக எடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்குவது என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலை மையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (7.5.2026) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
தமிழ்நாட்டு மக்களுக்கும்
தோழமை இயக்கங்களுக்கும் நன்றி!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் – இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு ஒரு கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலம் முதல் மக்கள் இயக்கமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதனை மக்களும் உணர்ந்து நன்றி உணர்வோடு வாக்களித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
தி.மு.கழகம் என்றும் மக்களுக்கான
இயக்கமாகவே செயல்படும்!
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகாமல் போனாலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. அந்த வகையில் வலிமையான, அதிக அளவிலான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது.
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, தமிழினத் தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு, திராவிட நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழிநடத்தப்படும் திராவிட முன்னேற்றக் கழகம், என்றும் மக்களுக்கான இயக்கமாகவே செயல்படும் என்று ஒருமனதாக உறுதியேற்கிறோம்.
தீர்மானம் 2:
தி.மு.க. தலைவருக்கு நன்றி
14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை தொடங்கியது முதல் ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திக் காட்டியது வரை, இந்த அரை நூற்றாண்டு காலமாக தனது உண்மையான உழைப்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தாய்த் தமிழ்நாட்டையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார் கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கடந்த அய்ந்தாண்டு காலம் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டிய ஆளுமைத் திறன் கொண்டவர் நம் தலைவர் அவர்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை உயர்த்தினார்கள். சமூக வளர்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணிக்கு வந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து பார்த்தது.
அனைத்துத் துறைகளையும்
உயர்த்திக் காட்டியவர் நம் தலைவர்!
அய்ந்தாண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்கள்; அத்தனை திட்டங்களும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மலர்ச்சியை ஏற்படுத்தி யது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு வரையும் பின்தங்க விட மாட்டேன் என்பதை நடை முறைப்படுத்திக் காட்டியது அவரது உண்மையான உள்ளத்துக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
கோட்டையில் இருந்து மட்டுமல்ல, மக்களோடு மக்களாக இருந்து ஆட்சியை நடத்தினார்கள். தங்க ளில் ஒருவராகவே தமிழ்நாட்டு மக்கள் அவரைப் போற்றினார்கள். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். அவர் முகத்தைக் கண்டதும், மக்கள் முகங்கள் மலர்ந்தன. இதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையும் உருவாக்கித் தந்தார் தலைவர் அவர்கள். இன்னும் நூறாண்டு காலத்துக்கு யாராலும் அசைக்க முடியாத பேரியக்கம் என்பதற்கான அடித்தளத்தை உறுதி செய்தார் தலைவர் அவர்கள்.
தேர்தல் களத்தில் தலைவரின்
உழைப்பு மலையளவு ஆகும்!
சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்பு மலையளவு ஆகும். தினந்தோறும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக முழங்கினார் தலைவர் அவர்கள். நடைபயணங்களின் மூலமாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும் மக்களோடு கலந்துரையாடினார்கள். இலட்சக்கணக்கான மக்களை தனித்தனியாகச் சந்தித்ததும் தலைவர் அவர்களின் சாதனை ஆகும்.
இத்தகைய பெருமைமிகு தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. “இப்படி ஒருவரைத் தலை வராகப் பெற என்ன தவம் செய்தோம்?” என்று பெரு மைப்படும் வகையிலான நம் தலைவர் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு நம்மை வழிநடத்த வேண்டும் என்று கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் 3:
தி.மு.க. தலைவருக்கு அதிகாரம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும்.
இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட வற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கடந்த அய்ந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றித் தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும்.
இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை தி.மு. கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மா னிக்கிறது.
தீர்மானம் 4:
காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ்கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.
காங்கிரஸ் உண்மையாக நடந்து கொள்ளவில்லை!
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்து கொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பா.ஜ.க.வின் செயலையே
காங்கிரஸ் தமிழ்நாட்டில் செய்துள்ளது!
பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
