சென்னை, மே 8 தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது.
பெண்களுக்கு ரூ.2,500
இதற்குப் போட்டியாக விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் மாதம் 2,500 ரூபாய் பெண்களுக்கு அறிவித்துள்ளார். இது தற்போதைய தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்
விஜய் அறிவித்துள்ள திட்டத்தில் உள்ள மிக முக்கியமான நிபந்தனை வயது வரம்பு. 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டுமே இந்த 2,500 ரூபாய் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் 21 வயது பூர்த்தியடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதில் அதிகபட்ச வயது வரம்பு என்று எதுவும் கிடையாது. இதனால் 60 வயதைக் கடந்த, ஆனால் முதியோர் உதவித்தொகை பெறாத பல முதிய பெண்களும் 1,000 ரூபாய் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆரம்பத்தில் சில நிபந்தனை களுடன் தொடங்கப்பட்டாலும், தற்போது தகுதியுள்ள அரிசி ரேஷன் அட்டை கார்டு வைத்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களுக்குச் சென்றடைகிறது.
ஆனால், விஜய்யின் திட்டத்தில் வயது வரம்பு இருப்பதால், மூத்த குடிமக்களாக இருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த 2,500 ரூபாய் திட்டத்தில் இருந்து தானாகவே விலக்கப்படுவார்கள்.
60 வயது உச்ச வரம்பு
மாதம் 1,000 ரூபாய் வழங்குவதற்கே அரசுக்கு பெரும் நிதிச்சுமை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், 2,500 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். இந்த நிதிச் சுமையைச் சமாளிக்கவே, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் 60 வயது என்ற உச்ச வரம்பை விஜய் நிர்ணயித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கலைஞர் திட்டத்தில் ஆண்டு வருமானம், மின்சார பயன்பாடு மற்றும் நில உடைமை போன்ற பல்வேறு காரணிகள் தகுதியாகப் பார்க்கப்படுகின்றன. விஜய்யின் அறிவிப்பில் வயது வரம்பு தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ரேஷன் அட்டை அல்லது வருமான வரம்பு குறித்த கூடுதல் நிபந்தனைகள் இன்னும் முழுமையாக விளக்கப்படவில்லை.
1,000 ரூபாயை விட 2,500 ரூபாய் என்பது நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பப் பெண்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். ஆனால், 60 வயது என்ற உச்சவரம்பு இப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளாக இருப்பவர்கள் பல பெண்கள் விஜய்யின் புதிய திட்டத்தில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
