சென்னை. மே 6- தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கட்சி அடைந்த தோல்வியைத் தாங்க முடியாமல் இருவேறு மாவட்டங்களில் அதிமுக தொண்டர் ஒருவரும், திமுக மூத்த நிர்வாகி ஒருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி: அதிமுக தோல்வியால் மனமுடைந்த தொண்டர் தற்கொலை.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (47). தீவிர அதிமுக தொண்டரான இவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாரிக்கண்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மூத்த நிர்வாகி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பிச்சை முகமது (89). இவர் கடந்த 30 ஆண்டுகளாக திமுக நகரப் பொருளாளராகவும், மூன்று முறை பேரூராட்சிக் கவுன்சிலராகவும் பதவி வகித்தவர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
அதேபோல், திருப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்தத் தோல்விச் செய்திகளைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்த பிச்சை முகமது, 06.05.2026 அன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு அவரது குடும்பத்தினரிடையேயும், திமுக தொண்டர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், மாநில அரசின் உதவி மய்யமான ‘104’ அல்லது சினேகா தற்கொலை தடுப்பு மய்யத்தின் ‘044-24640050’ என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
