இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண் ஆதித்யா ஆனந்தராசா, பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுள்ளார்.
ஆதித்யா ஆனந்தராசா, யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை பகுதியைச் சேர்ந்தவர். இவர் பிரான்ஸ் நாட்டில் துணை மேயராக பொறுப்பேற்று இருப்பது. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா, 19 வயதிலேயே பொன்டால்ட்-கொம்பால்ட் நகர்மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
தொடர்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.
ஆதித்யாவின் இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினரை அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
மேலும், பல்வேறு சமூகங்களுடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் ஆதித்யா ஆனந்தராசா முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன் மீதான எதிர்பார்ப்புகளை அவர் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
