சென்னை, ஏப். 28- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகள் மார்ச் முதல் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நேற்று (27.4.2026) மாலை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ஆம் தேதி முதல் 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்
முன்பருவக் கல்வி: அங்கன்வாடி மய்யங்களில் கல்வியை முடித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வகுப்பு வாரியான சேர்க்கை: 1ஆம் வகுப்பு மட்டுமின்றி, பிற வகுப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்களுக்கு தடையின்றி சேர்க்கை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பணிகள்: பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன் வகுப்பறைகள் மற்றும் TN-SPARK (செயற்கை நுண்ணறிவு மற்றும் அடிப்படை அறிவியல் அறிமுகத் திட்டம்) போன்ற நவீன கல்வித் திட்டங்கள் குறித்து பெற்றோர்களிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
“கடந்த ஆண்டை விட ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 50 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டால், அந்தப் பள்ளிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
“இந்த ஊக்க நடவடிக்கை காரணமாக, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் ஆசிரியர்கள் உற்சாகப் படுத்தப்பட்டு, சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்றைய (27.4.2026) சேர்க்கை நிலவரம் (புள்ளிவிவரங்கள்)பள்ளிக் கல்வித்துறை வெளியிட் டுள்ள தகவலின்படி, நேற்று (27.4.2026) மாலை 4 மணி வரை தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரம்:
வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை முதலாம் வகுப்பு 97,737; இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை 8,178; மழலையர் வகுப்புகள் (LKG/UKG) 6,796; மொத்த சேர்க்கை 1,12,711. இந்த அபாரமான தொடக்கம், அரசுப் பள்ளிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

