சென்னை, ஏப்.28 இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராகப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற சிறீஅகர்வால் சபாவின் 75-ஆவது ஆண்டு பவள விழா நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், இந்தியா பன்முகக் கலாச்சார தேசம் எனக் குறிப்பிடுவது தவறு என்றும், வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவருக்கும் ஒரே கலாச்சாரம்தான் என்றும் பேசியுள்ளார். ஆளுநரின் இந்த உரை இந்தியாவின் அடிப்படைத் தத்துவமான பன்முகத்தன்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. இந்தியா என்பது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற உன்னத கோட்பாட்டின் மூலமே இந்திய மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். “ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி” என்பதுடன், அதை ஹிந்து தேசம் மற்றும் ஹிந்தி மொழியாக மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தையே ஆளுநர் பிரதிபலிக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே, அதற்கு எதிராகச் செயல்படுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. இத்தகைய போக்கை ஆளுநர் உடனடியாகக் கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில், ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

