இம்பால், ஏப். 25– மணிப்பூரில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நேற்று (24.4.2026)மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல் சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
உக்ருல் மாவட்ட மோதல்
நேற்று (24.4.2026) அதிகாலை 5.30 மணியளவில், உக்ருல் மாவட்டத்தின் முல்லம் மற்றும் ஷோங்பெல் கிராமங்களுக்கு இடையே ஆயுதம் ஏந்திய இரு குழுக்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த மோதலில் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் எல்.சிட்லவ் மற்றும் பி.ஹாலாய் ஆகிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
சினகேய்தெய் துப்பாக்கிச் சூடு
இதேபோல் சினகேய்தெய் கிராமத்திற்கு அருகே நடந்த மற்றொரு தாக்குதலில், காம்ஜோங் மாவட்டத்தைச் சேர்ந்த எச்.ஜமாங் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏற்கெனவே கடந்த 7ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்த குண்டுவீச்சு சம்பவத்தில் 5 வயது சிறுவனும், 6 மாதக் குழந்தையும் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.:
இந்தத் தொடர் படுகொலைக ளைக் கண்டித்தும், வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடி யாகக் கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த அமைப்புகள் மணிப்பூரில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து பதற்றம் நிலவும் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
