சென்னை, ஏப்.26 ‘‘வரலாறு மீண்டும் திரும்பும்; திமுக ஆட்சி தொடரும்!’’ என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி.
சட்டமன்றத் தேர்தலில், சென்னை சிஅய்டி காலனியில் உள்ள வாக்குசாவடியில் தனது ஜனநாயக கடமையையாற்றிய பின் திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு முழுக்க செய்த சுற்றுப்பயணம் குறித்தும், தேர்தல் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்கள் நிச்சயமாக ஒரு தெளிவான முடிவை எடுப்பார்கள். நான் மக்களைத் தொடர்ந்து சந்தித்ததன் அடிப்படையில் சொல்கிறேன், உறுதியாக திமுக ஆட்சி தொடரும் என்று மிகவும் நம்புகிறேன். நான் இத்தனைத் தொகுதிகள் நிச்சயமாக வெல்வோம் என்ற எண்ணிக்கைக்குள் போக விரும்பவில்லை; ஆனால், திராவிட முன்னேற்ற கழக கூட்டணி நிச்சயம் சிறப்பான ஒரு வெற்றியை பெறும் என்றார்.
தவெக விஜய்யின் பின்னால் பெரும்பாலான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, வாக்கு எண்ணும் நாளில் இதன் உண்மை என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியவரும் என்றார்.
1971-க்கு பிறகு திமுக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும் என்று புன்னகைத்தப்படி பதில் அளித்தார்.
பிரச்சினைகளுக்குத்
தீர்வு தேடிய கல்லூரி மாணவி:
சாமியார் செய்த விபரீதச் செயல்!
புனே, ஏப்.24 மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ரேணுகா ஹர்ஷவர்தன் லிகிதே (வயது 25). புல்லாங்குழல் கலைஞரான இவர், புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் உள்ள ஒரு ஆன்மிக இசைப் பள்ளியில் முதுகலை இசை படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி ரேணுகா தனது விடுதி அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பவுட் காவல்துறையினர், ரேணுகாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேணுகாவின் தற்கொலை குறித்து காவல்துறையிரன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதன் விவரம் வருமாறு:-
ரேணுகாவுக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன. இதற்குத் தீர்வு காண்பதற்காக அவர் சமூக வலைதளம் மூலம் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சாமியாரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர், ‘உன் பிரச்சினைகள் தீர சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ரேணுகா, கடந்த 4 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை அந்தச் சாமியாரின் வங்கிக்கணக்கிற்கு சுமார் ரூ.74 ஆயிரத்தை இணைய வழி மூலம் அனுப்பியுள்ளார்.
ரேணுகா தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்துவிட்ட பிறகும், அந்தச் சாமியார் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், ‘‘நீ பணம் கொடுக்காவிட்டால் உனக்கும். உன் தாய்க்கும் விபரீதம் ஏற்படும்’’ என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ரேணுகா, மன உளைச்சலில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் அடையாளம் தெரியாத அந்த சாமியார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அந்த சாமியாரைப் பிடிக்க ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளனர்.

