மதுரை, ஏப். 22- தமிழ்நாட்டில் எப்அய்ஆர் (FIR) நகல்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்குரைஞர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:முன்பு பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்கள் தவிர்த்த மற்ற அனைத்து எப்அய்ஆர்களையும் பொதுமக்கள் இணையத்தில் பார்க்கும் வசதி இருந்தது.
தற்போது அமலில் உள்ள சிசிடிஎன்எஸ் 2.0 (CCTNS 2.0) திட்டத்தின் கீழ், புகார் அளித்தவர் மற்றும் விசாரணை அதிகாரி மட்டுமே எப்அய்ஆரை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் வழக்கின் தன்மையை அறிய முடியாமல், முன்பிணை போன்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தாமதம் ஏற்படுகிறது. எனவே, உணர்வுப்பூர்வமான வழக்குகளைத் தவிர மற்ற எப்அய்ஆர்களை இணையத்தில் அனைவரும் பார்க்கும் வசதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதிஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவு:”எப்அய்ஆர் நகலை புகார்தாரர், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் ஆகியோர் தற்போதைய நடைமுறைப்படி பார்வையிட வசதி உள்ளது. ஒருவேளை மூன்றாம் தரப்பினர் எப்அய்ஆர் நகலைப் பார்வையிட அல்லது பெற விரும்பினால், அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகி முறைப்படி சான்றொப்பமிட்ட நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.”
இந்த விளக்கத்துடன் நீதிபதிகள் அந்த மனுவை முடித்து வைத்தனர். இதன் மூலம் எப்அய்ஆர் நகல்களைப் பெறுவதில் உள்ள சட்ட நடைமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

