பழனி, ஏப். 20- திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சாமி சிலையை திருடும் கும்பலை பார்த்திருப்போம். ஆனால் சாமியைத் திருடும் கும்பல் தற்போது வந்துள்ளது. இந்தத் தேர்தல் மூன்று மாடலுக்கான தேர்தல். ஒன்று திராவிட மாடல், 2ஆவது அடிமை மாடல், 3ஆவது சினிமா மாடல். ‘திராவிட மாடல்’ கல்வியைக் கொடுத்தது. இந்தியாவிலேயே ஒரு மாநிலம் இப்படி இருக்க வேண்டும் என பெருமையை சேர்த்தது. மொழி மானத்தை காப்பாற்றியது. தற்போது இன மானத்தைக் காப்பாற்ற போராடுகிறது.
‘அடிமை மாடல்’ என்பது நமது தன்மானத்தை, சுயமரியாதையை மோடியிடம் கொடுப்பது. மக்கள் தொகையை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் திட்டத்தை தேர்தல் நேரத்தில் கொண்டு வரும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
இதை பார்த்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கூட்டணி கட்சியினர் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றனர்.
சினிமா மாடல் என்றால் சினிமாவில் டாக்டர் ஆகலாம், என்ஜினீயர் ஆகலாம். ஏன் முதல மைச்சர் கூட ஆகலாம். அரசியலில் வந்த உடனே முதலமைச்சராக முடியுமா? என்னுடைய அளவுக்கு விஜய் அரசியல் பேசி உள்ளாரா?, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தபோது, அவர்களுக்காக நின்றதுண்டா?.
சினிமாவில் திறமையைப் பார்த்து மக்கள் வைத்துள்ள அன்பை, தற்போது அரசியலுக்கு பயன்படுத்துகிறார். நடிகனை பிடித்தால் விசில் அடிக்கலாம். ஆனால், நாட்டை கொடுக்க முடியுமா. இந்த தேர்தல் ஒற்றுமைக்கும், பிரிவினைக்குமான தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.
