“சக்சம் இல்லை… ஆனால் என் காதல் இன்னும் இருக்கிறது” ஆணவப் படுகொலை செய்வர்களின் முகத்தில் கரியைப் பூசிய இளம்பெண்!

2 Min Read

மகாராட்டிர மாநிலம் நாந்தேட் நகரின் ஜூனாகாட் பகுதியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜாதி வேறுபாடு காரணமாக காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காதலியின் குடும்பத்தினர், காதலனை வஞ்சகமாகப் பிடித்து கொலை செய்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜாதித்தடை

உயிரிழந்த சக்சம் தாடே (20) தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். காதலி ஆச்சல் மாமீட்வார் (21) மூன்று ஆண்டுகளாக சக்சமுடன் காதலித்து வந்தார். சக்சம் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் ஆச்சலின் குடும்பத்தினர் இந்த உறவைக் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

சக்சம் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர், ஆச்சலின் குடும்பத்தினர் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக ஆச்சல் குற்றம் சாட்டுகிறார்.

கொலை நடந்த வியாழக்கிழமை மாலை 5.45 மணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே ஆச்சலின் தாயார் ஜெயசிறீ மாமீட்வார் சக்சமின் வீட்டுக்குச் சென்று வெளிப்படையாக மிரட்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

சக்சமின் உடலுக்கு ஆச்சல் தானே மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டார். பின்னர் தன் நெற்றியிலும் பூசிக்கொண்டு, “இனி நான் சக்சமின் வீட்டில்தான் இருப்பேன்” என்று அறிவித்தார்.

“என் காதலன் இறந்தும் ஜெயித்துவிட்டார். ஆனால் என் பெற்றோர் அவரைக் கொன்றும் தோற்றுவிட்டனர். நாங்கள் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் என் குடும்பத்தினர் எதிர்த்தார்கள். என் தந்தை, தாய், சகோதரர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இது ஆணவப் படுகொலை” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

சக்சமின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆச்சலின் தந்தை கஜானன் மாமீட்வார் (45), சகோதரர்கள் சாஹில் மாமீட்வார் (25), ஹிமேஷ் மாமீட்வார், தாயார் ஜெயசிறீ, மதன்சிங் தாக்கூர், சோமேஷ், சுபாஷ் லக்கே, வேதாந்த், அசோக் குண்டேகர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றம் நடந்த 12 மணி நேரத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள்:   கஜானன் மாமீட்வார் மற்றும் சாஹில் மாமீட்வார் ஆகியோர் கொலையை ஒப்புக்கொண்டதாக நாந்தேட் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆணவப் படுகொலைக்கு
எதிராக காதல் வென்றது

“சக்சம் இப்போது இல்லை, ஆனால் நான் இன்னும் அவர் மீது காதல் கொண்டிருக்கிறேன். நான் அவர் வீட்டில்தான் வாழ்வேன்” என்று உறுதியுடன் கூறிய ஆச்சல், தன் குடும்பத்தினரால் பலமுறை மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நாந்தேட் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் பிரசாந்த் ஷிண்டே, “குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

ஆணவப் படுகொலையால் இன்னொரு இளம் உயிர் பலியான இந்தச் சம்பவம், மகாராட்டிராவில் மீண்டும் ஜாதி வெறுப்புக் கொலைகள் பற்றிய கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *