சீனாவில் இருந்து பரவும் புதிய தொற்று கேரளா – தெலங்கானா மாநிலங்களில் கண்காணிப்பு

Viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், ஜன.5 சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளி யாகியுள்ளன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இருந்தாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற் படுத்தாது என்று சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் விடுபட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு தொற்று பரவலா? என்று உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியாவிலேயே கேரள மாநில மக்கள்தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனவே சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அந்த மாநில அரசு தீவிரமாக கண்காணிக்கத்தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அந்த மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது முகநூல் பதிவில், சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றுநோயாக மாறக்கூடிய அல்லது மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவக்கூடியதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. உலகின் அனைத்து பகுதிகளிலும் மலையாளிகள் இருப்பதால், சீனா உள்பட வெளிநாட்டவர்கள் அடிக்கடி மாநிலத்திற்கு வருவதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாங்கள் சீனாவில் நிலைமையை கண்காணித்து வருகிறோம். இருப்பினும் மக்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானாவின் பொது சுகாதார இயக்குநர் பி.ஆர்.அவிந்தர் நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.சி. பாதிப்பு பற்றி எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பன்னாட்டு சுகாதார அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *