மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அனுமதிச்சீட்டு 21ஆம் தேதி முதல் வழங்கப்படும்

viduthalai
1 Min Read

சென்னை, டிச.18- மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அனுமதிச் சீட்டு (டோக்கன்) டிச.21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வரும் 21ஆம் தேதி முதல் ஜன.31ஆம் தேதி வரை வழங்கப்படும்.

அடையாறு, எம்கேபி நகர், பாடியநல்லூர், குன்றத்தூர், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் என 42 இடங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாள்களில் அலுவலக நேரத்தில் டோக்கன் வழங்கப்படும்.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண அனுமதி பயணச் சீட்டு (டோக்கன்கள்) மற்றும் அடையாள அட்டைகளை புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் 2 வண்ண புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *