சுயமரியாதை நாள் விழா: பகுத்தறிவு கலைத்துறையின் ‘கலை உறவாடல்’

viduthalai
2 Min Read

அரூர், டிச.8- பகுத்தறிவு கலைத் துறையின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் (சுயமரியாதை நாள்) விழாவை கொண்டாடும் வகையில், கலை உற வாடல் நிகழ்வு அரூரில் 2.12.2024 அன்று மாலை பெரு மழையிலும் சிறப்பாக நடத்தப்பட்டது. மரபுக் கவி உறவாடல், புதுக்கவி உறவாடல், இசை உறவாடல், கதை உறவாடல், நகை உறவாடல், வாழ்த்துறவாடல் என புதுமையான தலைப்புகளில் சிறப்பாக விழா நடத்தப்பட்டது. பகுத்தறிவு கலைத் துறையின் மாநில செயலாளர் மாரி கருணாநிதி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, தலைமை வகித்தார்.

முதல் அமர்வான மரபுக் கவி உற வாடலில் ‘தன்மான மீட்பு தலைவர் ஆசிரியர்’ என்ற தலைப்பில் பாவலர் பெரு முல்லையரசு, ‘உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் இவரே அன்றோ’ என்ற தலைப்பில் கவிஞர் கண்ணிமையும் மரபுக் கவிதைகளை வாசித்து சிறப்பித்தனர்.

புதுக்கவி உறவாடல் அமர்வில், மாவட்டச் செயலாளர் கவிஞர் கு. தங்க ராசு, ‘பம்பரமாய் சுழலும் பகுத்தறிவு தேர்’ என்ற தலைப்பிலும், கவிஞர் ஆதி முதல்வன், ‘புரட்சியின் வேர்’ என்ற தலைப்பிலும், கவிமுகிலன் அசோகன், ‘அறிவாசான் வழி’ என்ற தலைப்பிலும், கவிஞர் பிரேம்குமார், ‘மானமிகு தொண்டன்’ என்ற தலைப்பிலும், கவிஞர் ராஜேசன், ‘போர்வாள்’ என்ற தலைப்பி லும், மாவட்ட கலைத்துறை செயலாளர் கவிஞர் கீரை பிரபாகரன், ‘விடுதலை தலைவன்’ என்ற தலைப்பிலும், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ‘92 தொட்டும்’ என்ற தலைப்பிலும் புதுக்கவிதை வாசித்து மகிழ்ந்தனர்.

இசை உறவாடல் அமர்வில், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா.ராஜேந்திரன், மாவட்ட பகுத்தறிவு கலைத்துறை துணைச் செயலாளர் மணி மேகலை ஆகியோர் இசை பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

கதை உறவாடல் நிகழ்வில் எழுத்தா ளர் உதயசூரியன், ‘மிங்கூர் ஜமீன்’ என்ற பெருங்கதையை கூறி, ஸனாதனத்தின் உச்சபட்ச ஜாதி வெறியைக் கதையாடி னார்.

நகை உறவாடல் அமர்வில் நகைச்சுவை நன்மணி மாவட்ட பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்
வை. அரசு அரங்கில் குழுமி இருந்த அனைவரும் சிரித்து சிந்திக்க நகைச்சுவையை அள்ளி வீசினார்.

வாழ்த்துறவாடல் அமர்வில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் அனைவரையும் பாராட்டி ஆசிரியருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றினார்.
நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் மிக புதுமையான நிகழ்வு என்று அகமகிழ்ந்து ஆசிரியர் பிறந்தநாளை கொண்டாடினர்.
சுயமரியாதை நாள்: காத்திருந்து காலம் முழுக்க கொண்டாட வேண்டும்!
நிகழ்வை ஒருங்கிணைத்து தலைமை உரையாற்றிய மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளை, காலத்தே கொண்டாட வேண்டும், காத்திருந்து கொண்டாட வேண்டும்; காலம் முழுக்க கொண்டாட வேண்டும் என்று எடுத்துரைத்து, கவிதைகள், கதை, நகைச்சுவை, பாடல்கள் மக்கள் மறுமலர்ச்சிக்கும், பகுத்தறிவு வளர்ப்புக்கும், மூட நம்பிக்கை ஒழிப்பிற்கும் பயன்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிகழ்வில் சிவக்குமார், மாணவர் கழகத் தலைவர் சாய்குமார், தென்றல் பிரியன், மகளிர் அணி உமா, தொழிலாளரணி தலைவர் சிலம்பரசன், பசுபதி, கொளகம்பட்டி மணிமேகலை, ஒன்றியத் தலைவர் என்டி குமரேசன், நகர பொறுப்பாளர் விண்ணரசன் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாது பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளை (சுயமரியாதை நாளை) சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *