பவுத்த பிக்குகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பவுத்த பிக்குகள் தமது விகாராதிபதி, பிராந்திய நாயக்க தேரர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை தேரர்களிடம் இருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை எதிர்காலத்தில் மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த காலங்களில் சில காரணங்களினால் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிக்குகள் கைது
போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய சில பிக்குகள் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட சாசனத்திற்கு எதிரான சம்பவங்கள் பதிவானதை அடுத்து மகாநாயக்கதேரர் களிடம் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த கலந்துரையாடலில் இந்த பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப் படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 26ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 பிக்குகள், சுமார் 110 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ (Hash) போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
