திருப்பத்தூர், நவ.29 திருப்பத்தூா் அருகே மாணவரின் புத்தகத்தில் ஜாதிப் பெயரை எழுதிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலா் மலைவாசன் உத்தரவிட்டார்.
திருப்பத்தூரை அடுத்த குனிச்சி மோட்டூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு,
100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளியில் ஆங்கிலப் பாட ஆசிரியராக விஜயகுமார் என்பவா் பணிபுரிந்து வந்தார்.இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு 7-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புத்தகத்தில் உள்ள இசைக் கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார். அப்போது, குறிப்பிட்ட ஒரு இசைக் கருவியின் பெயரை குறிப்பிட்ட ஜாதியைச் சோ்ந்தவா்கள் மட்டுமே வாசிப்பார்கள் எனக்கூறி ஓர் மாணவரின் பாடப் புத்தகத்தில் அந்த மாணவரின் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதி, அனைத்து மாணவா்கள் முன்னிலையில் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.இது குறித்து அந்த மாணவா் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர்மற்றும் உறவினா்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று இது குறித்து ஆசிரியா் விஜயகுமாரிடம் கேட்டுள்ளனா்.
அப்போது, ஆசிரியா் விஜயகுமார் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள், வி.சி.க.வினா் 26.11.2024 அன்று அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு ஆங்கில ஆசிரியா் விஜயகுமார்மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.மேலும், கந்திலி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து ஆசிரியா் விஜயகுமாரை திருப்பத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் மலைவாசன் நேற்று (27.11.2024) பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார். மேலும், ஆசிரியா் விஜயகுமார் மீது கந்திலி காவல் நிலையத்தில் எஸ்.சி. மற் றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.