காவலர்களையும், ஊடகத்தினரையும் திரிசூலம் கொண்டு தாக்கிய பெண் அம்மணச் சாமியாரிணி
விஜயவாடா, நவ.23 இந்தியா முழுவதும் வலம்வந்துகொண்டு இருக்கும் பெண் அம்மணச் சாமியாரிணி தற்போது ஆந்திராவில் உள்ள கோவில்களைப் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு அம்மணக்கோலத்தில் காரைக் கழுவவேண்டும் என்று அங்குள்ள ஒரு கார் பழுதுபார்க்கும் கடையில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பொதுமக்கள் திரளவே அவர் அவர்களுக்குத் தரிசனம் தரும் நோக்கில் அமர்ந்துகொண்டார்.
இதனை அறிந்த செய்தியாளர் ஒளிப்படங்கள் எடுக்க முயன்றபோது, ‘‘என்னிடம் அருளாசி பெறவரும் பக்தர்களுக்குத் தொல்லை தருகிறீர்களா?‘‘ என்று கூறி திரிசூலத்தால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தினார்.
பின்னர், ஜனசேனா கட்சி அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே காரை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வந்த பிறகுதான் செல்வேன் என்று கூறிஅமர்ந்துவிட்டார்.
நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்தச் சாமியாரிணியை அங்கிருந்து செல்லக் கூறினார்கள். ஆனால், ‘‘அவர் என்னை ஒரு ஆண் எப்படித்தொடலாம்? நான் பல ஆண்டுகாலம் செய்த தவம் கலைந்துவிட்டது‘‘ என்று கூறி காவலர்களைத் தாக்கினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, நக்கபள்ளி சுங்கச்சாவடி அருகே ஒரு அகோரி சுங்கச்சாவடி ஊழியர்களிடம், ‘‘நான் கடவுளுக்கு இணையானவள்; என்னிடமா பணம் கேட்கிறீர்கள்?‘‘ என்று கூறி மனித எலும்புகளை அவர்கள் மீது தூக்கி வீசியுள்ளார்.
சுங்கச்சாவடி ஊழியர்களும், சில உள்ளூர் மக்களும் தன்னை முறைகேடாக தொட்டதாக அகோரி குற்றம்சாட்டினார். அங்கும் பல கிலோமீட்டர் தூரம் சாலை நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் மன்னிப்புக் கேட்டு, பணம் வாங்காமலேயே அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் உயரமான இடத்தில் அம்மணக்கோலத்தில் ஏறி நின்றுகொண்டு கடவுளுக்கு இணையாக இருக்கும் சாத்வினி நாகா (பெண் அம்மணச் சாமியார்)விற்கே இந்த நிலை என்றால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்– இது கலியுகம் என்று பாடம் எடுத்தார்.